Wednesday, May 16, 2012

உன்னையே சுற்றும் மனது



சாட்டை இல்லாமலேயே
பம்பரமாய் சுற்றுகிறேன்
சட்டை செய்யாமல்
போனால் எப்படி ?

உறக்கத்தில் கூட
உன்னை மட்டுமே
சுற்றித்திரிகிறது மனது.

உன் அதரங்களின் சிதறும்
மதுத்துளிகளை
பார்வையால் விழுங்கி
மயங்கிப் போனதில்
புரியாமல் கேட்கிறேன்...

எனக்காக ஜனித்தவளே
உன் உதடுகளால் என்னை சபிக்கிறாயா?
இல்லை...
உள்ளத்தால் எனக்காக ஜெபிக்கிறாயா?

சுட்டும் விழிச்சுடரில்
என்னை சுட்டுப்போட்டுவிட்டு
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்!

உன் கன்னக்குழிக்குள்
விழுந்த என்னை
சவக்குழிக்குள் தள்ளாதே.

உனக்கும் எனக்கும்
போலியாய் ஒரு
பிணக்கு எதற்கு?




மணக்க மணக்க
வாழ்க்கை நடத்தலாம்
பூங்கொடியே....
பச்சையாய் திட்டாதே
பச்சைக்கொடி காட்டு!

கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகள்...




விளைநிலம் வீடாய் வீடெல்லாம் கூடாய்
குளிர் அறைகள் குருவிகளை ஓட்டியதில்
புழுங்கி அழுகிறது மனது.

குருவிகள் அமராத மின்கம்பி
‘சாக்’ அடிக்கிறது உயிரில்.

நகரமயமாதலால் மயானமயமானது
குருவிகளின் தேசம்.  

உயரப்பறந்த ஊர்க்குருவிகள் உயிர்த்துயராய்
கைபேசி கோபுர கதிர்வீச்சு.

பிளாஸ்டிக்பைகள் உமதுயிர் நெரித்ததால்
தொன்மை குருவிகளைத் தொலைத்து
திண்ணையில் காயும் அரிசியோடு காய்கிறது
காயப்பட்ட இயற்கை.


தானியங்களோடும் தண்ணீர் கிண்ணத்தோடும்
இன்றில்லை திண்ணை.


ஊறுசெய்துவிட்டு ஊர்க்குருவிகளை
ஊரெங்கும் தேடுகிறோம்.
கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகளை
பாரெங்கும் தேடுகிறோம் இதயபாரத்தோடு!


ஓடும் மின்விசிறியில் அடிபட்டு
செத்து விழுகிறது
தத்தித்தாவி கொத்தித்தின்னும்
மனையுறை குருவி பார்க்கும் கனவு.

விஞ்ஞான வளர்ச்சியில்
உரம், பூச்சிக்கொள்ளிகளுக்கு இரையானது
இன்று குருவிகள்....
நாளை.... மனிதன்!